மதுரை சிறையில் படித்து 2 தங்க பதக்கம் பெற்ற ஆயுள் கைதி
01:38:56
Friday
2013-08-02
மதுரை : சிறையில் இருந்தபடியே படித்து 2 தங்க பதக்கம் பெற்ற ஆயுள் கைதி, கவர்னரிடம் நேரில் விருது பெற அனுமதிக்க கோரி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மனுவுக்கு பதிலளிக்க அரசு தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் வீரபாரதி. இவர், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு:
கொலை வழக்கில் எனக்கு விருதுநகர் கோர்ட் 1999ம் ஆண்டு தூக்கு தண்டனை விதித்தது. ஐகோர்ட் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக 2000ம் ஆண்டு குறைத்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தேன். மனு தள்ளுபடியானது. 1998 பிப்ரவரி 15ம் தேதியில் இருந்து கடந்த 15 ஆண்டாக மதுரை சிறையில் இருந்து வருகிறேன். சிறையில் இருந்தபடியே படித்து, இதுவரை 6 பட்டம் பெற்றுள்ளேன்.
தமிழக திறந்த வெளி பல்கலைக்கழகத்தில் 2011ம் ஆண்டு ஸ்போக்கன் இங்கிலிஷ் (பிஜிடிஎஸ்இ), 2012ம் ஆண்டு நான்கு சக்கர தொழில்நுட்பம் (பிஎப்டபிள்யூஎம்) படித்தேன். இரு பாடத்திலும் பல்கலைக்கழக அளவில் முதலிடத்தில் வெற்றிப்பெற்றுள்ளேன். 2013 மார்ச் 12ம் தேதி நடந்த தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, கவர்னரிடம் இரு தங்க பதக்கங்கள் மற்றும் தகுதி சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளுமாறு எனக்கு பதிவாளர் கடிதம் அனுப்பினார். நேரில் சென்று கவர்னரிடம் தங்க பதக்கம் பெற என்னை அனுமதிக்கும்படி சிறை கண்காணிப்பாளருக்கு மனு கொடுத்தேன். ஆனால், சிறை கண்காணிப்பாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிறை பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். 15 ஆண்டுகளில் பல முறை போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் பரோலில் சென்று சிறைக்கு திரும்பி வந்துள்ளேன். பரோலில் இருந்த காலங்களில் விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றி வந்துள்ளேன். எனவே, நான் தங்க பதக்கம் பெற, சிறப்பு பட்டமளிப்பு விழா நடத்த தமிழ்நாடு திறந்த வெளி பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும். அந்த பட்டமளிப்பு விழாவில், கவர்னரிடம் நேரில் பதக்கம், சான்றிதழ் பெற என்னை அனுமதிக்க சிறை கண்காணிப்பாள ருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ''சிறையில் இருந்தபடியே படித்து மனுதாரர் பட்டம் பெற்றுள்ளார். இவரைப் போன்றவர்களை ஊக்குவிக்க வேண்டும்,'' என கூறினார். பின்னர், விசாரணையை ஆக. 6ம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்று அரசு தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்'' என நீதிபதி உத்தரவிட்டார்.
எக்ஸ்ட்ரா தகவல்
இந்தியாவில் மொத்தம் 123 மத்திய சிறைகள் உட்பட 1,382 சிறைச்சாலைகள் இருக்கின்றன. இதில், 3 லட்சத்து 32 ஆயிரம் கைதிகளை அடைக்கலாம். பெண்கள் சிறை 19 உள்ளது.
No comments:
Post a Comment